மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த திமுக சதி.. ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி..!
கொரோனா மரணங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லையென்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை, ஜூலை-25

இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது ;-
மதுரையில் மக்கள் ஒத்துழைப்பில் நோய்த்தொற்று கட்டுக்குள் இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல் கொடுத்துள்ளது. அதன்படி 444 மரணங்கள் குறித்து மருத்துவக்குழு ஆய்வு செய்து நாள்பட்ட பிற நோய்களால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்த நோயாளிகளுக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு உறுதி செய்யப்பட்டு அதன்பின்பு அந்த மரணங்களை கோவிட்19 மரணங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணத்தை மறைக்க வேண்டிய அவசியம், கட்டாயம் எங்களுக்கு இல்லை. இதற்கு மருத்துவமனை, சுடுகாடு உள்ளிட்ட இடங்களில் ரிக்கார்டும் உள்ளது. மரணத்திற்கு ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கும் போது மரணத்தை எவ்வாறு மறைக்க முடியும். மக்கள் மத்தியில் அச்சத்தை பதட்டத்தை பீதியை ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயற்சிக்கிறது. எங்கள் வேலையை சரியாக செய்து கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.