மின்கட்டண உயர்வு.. தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்
தமிழகம் முழுவதும் மின்கட்டண உயர்வை கண்டித்து திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கறுப்புக்கொடியுடன் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார்.
சென்னை, ஜூலை-21

தமிழகத்தில் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இதைக்கண்டித்து இன்று (ஜூலை 21) கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தின் முன் கருப்பு கொடி ஏற்றி, கருப்பு சட்டை அணிந்து மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதைபோல் சென்னை சிஐடி காலனியில் உள்ள வீட்டின் முன்பு தி.மு.க. எம்பி கனிமொழியும், அண்ணா அறிவாலயத்தில் தயாநிதி மாறனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வீட்டில் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், மின்கட்டண உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்