கோவை, நீலகிரி, சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
தமிழகத்தில் கோவை, நீலகிரி, சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, ஜூலை-18

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:-
தமிழகத்தில் கோவை, நீலகிரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
நாளை உள் தமிழகம், தெற்கு கடலோர தமிழகம், நீலகிரி, கோவை, மதுரை, தேனி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் நகரின் சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 22ஆம் தேதி வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும், ஜூலை 20, 21 தேதிகளில் தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.