திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரோனா.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி, ஜூலை-3

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 19-ஆம் தேதி திருப்பதி கோயிலின் நடை சாத்தப்பட்டு, மீண்டும் கடந்த மாதம் ஜூன் 5-ஆம் தேதி திறக்கப்பட்டது. தேவஸ்தான ஊழியர்கள் தொடர்ந்து 10 நாட்கள் பணி செய்து விட்டு, மீண்டும் 10 நாட்கள் விடுப்பிலிருந்து, மறுபடியும் பணிக்குத் திரும்பும் போது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இருப்பினும் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர், 4 வாத்தியக்காரர்கள், 5 பாதுகாவலர்கள் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தேவஸ்தானத்தில் பணி புரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நாளை தேவஸ்தானம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இணையதள வாயிலாகச் சீட்டுகள் விற்கப்பட்டு, தினமும் 12,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது, குறிப்பிடத்தக்கது.