இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது; மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடம்..!
இந்தியாவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3.59 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
டெல்லி, ஜூலை-2

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 604641 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 19148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 434 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17834 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 359860 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 11881 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 226947 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,80,298 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8053 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 93,154 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 94,049 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,264 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 52,926 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 89,802 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 2,803 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 59,992 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.