பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, ஜூன்-30

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு 1.7.2020 முதல் 28.10.2020 வரை தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பாசனத்திற்கு பாரூர் பெரிய ஏரியிலிருந்து 2.7.2020 முதல் 13.11.2020 வரை மொத்தம் 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளான் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு பாரூர் பெரிய ஏரியிலிருந்து 2.7.2020 முதல் 13.11.2020 வரை மொத்தம் 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.