பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு..! விலை நிலவரம்..
பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை, ஜூன்-29

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் மாற்றி அமைத்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.
உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால், கச்சா எண்ணெய் விலை கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெகுவாக குறைந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 15 டாலர் என்ற நிலைக்கும் கீழ் சரிந்து வந்தது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த 7-ம் தேதியில் இருந்து நேற்றுமுன்தினம் வரை 21 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வந்தது. இருப்பினும், நேற்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய முன்தினம் விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மீண்டும் 22வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 04 காசுகள் உயர்ந்து ரூ.83.63-க்கும், டீசல் 11 காசுகள் உயர்ந்து ரூ.77.72-க்கும் விற்கப்படுகிறது.
கடந்த 7-ம் தேதி முதல் பெட்ரோல் விலை ரூ.8.09ம், டீசல் விலை ரூ.9.50ம் வரலாற்றில் முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இம்மாத இறுதிக்குள் புதிய உச்சத்தை தொடவுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90ஐ கடக்கும் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் விலையேற்றத்தால், லாரி உரிமையாளர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.