சென்னையில் 13 மண்டலங்களில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது..!
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னை, ஜூன்-27

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
சென்னையில் 49 ஆயிரத்து 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 730 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 7,211 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 60.13 சதவீதம், பெண்கள் 39.87 சதவீதம். மண்டலம் வாரியாக பார்க்கும்போது, ராயபுரத்தில் 7,211 பேர், தண்டையார்பேட்டையில் 5,989 பேர், தேனாம்பேட்டையில் 5,655 பேர், கோடம்பாக்கத்தில் 5,316 பேர், அண்ணாநகரில் 5,397 பேர், திருவிக நகரில் 4,132 பேர், அடையாறில் 3,057 பேர், வளசரவாக்கத்தில் 2,201 பேர், திருவொற்றியூரில் 1,912 பேர், அம்பத்தூரில் 1,982 பேர், மாதவரத்தில் 1,524 பேர், ஆலந்தூரில் 1,229 பேர், பெருங்குடியில் 944 பேர், சோழிங்கநல்லூரில் 1,037 பேர், மணலியில் 798 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.