தந்தை விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.. சட்ட போராட்டம் தொடரும் – கவுசல்யா
தந்தை சின்னசாமியை உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். எனது சட்டபோராட்டம் தொடரும் என கவுசல்யா தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜூன்-22

திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கா் மற்றும் கவுசல்யா தம்பதியினா் மீது கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கணவர் சங்கா் உயிாிழந்தாா். மாநிலத்தையே உலுக்கிய இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக திருப்பூா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, பழநி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்ற கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல், ஜெகதீசன் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கிலிருந்து கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, அவரது உறவினர் பாண்டித்துரை, கல்லூரி மாணவன் பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும், 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலை உறுதி செய்யப்பட்டது. வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க கோரி போலீசார் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கவுசல்யா, உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை சின்னசாமியை உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் எனது தரப்பையும் வழக்கில் இணைத்துக்கொள்வேன். கொலைக்கு தொடர்புடையவர்களுக்கு தண்டனை கிடைத்தால் தான் சங்கருக்கான நீதி கிடைக்கும். தாய் அன்னலட்சுமிக்கு தண்டனை கிடைக்க போராடுவேன் எனது சட்டப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.