செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு இயக்குனர் நியமனம்.. மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு..!
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குனர் நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு ரஜினிகாந்த் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை, ஜூன்-4

சென்னை தரமணியில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனமானது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு மே 19-ம் தேதி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அதற்கு முழு நேர இயக்குனர் நியமிக்கப்படவில்லை. இதனால், பல குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இதற்கிடையே, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குனராக இரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதலாவது இணை இயக்குனராக ஆர். சந்திரசேகரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர். செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குனராக இரா.சந்திரசேகரன் அமர்த்தப்பட்டது என்பது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதனை பாராட்டும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் அமைச்சகத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மரியாதைக்குரிய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு, தமிழ் மொழிக்காக நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும், அர்ப்பணிப்புக்கும், சென்னையிலுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு இயக்குனரை பணியமர்த்தியதற்கும் எனது நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.