டெல்லி வன்முறை திட்டமிடப்பட்ட ஒன்று… அரசியல் சூழ்ச்சி- சோனியா காந்தி
டெல்லி, பிப்ரவரி-26
டெல்லியில் நடந்த வன்முறை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
கூட்டம் முடிந்ததும் சோனியா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: டெல்லி வன்முறை கவலையளிக்கிறது, இது ஒரு அரசியல் சூழ்ச்சி. டெல்லி தேர்தலுக்கு பிறகு வேண்டுமென்றே இதுபோன்ற சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
டெல்லியில் நடந்த வன்முறை ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லி வன்முறைக்கு மத்திய அரசும், உள்துறையும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். மக்களிடையே வெறுப்பை தூண்டும் வகையில் பா.ஜனதா தலைவர் பேசி வருகின்றனர் என கூறினார்.