மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்
மதுரை, பிப்ரவரி-21
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
2013-ம் ஆண்டு திண்டுக்கல்லில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவையும் அரசையும் விமர்சித்ததாக கூறி திண்டுக்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி மு.க.ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், ஸ்டாலின் வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.