பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட இளம் பெண்- தேசதுரோக வழக்கில் கைது
பெங்களூரு, பிப்ரவரி-21
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தின்போது ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷத்தை எழுப்பிய இளம்பெண்ணை தேச துரோக வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு சுதந்திர பூங்காவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவா் அசாதுதீன் ஓவைசி, மஜத மாமன்ற உறுப்பினா் இம்ராம் பாஷா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
இந்த கூட்டத்தின் மேடையில் ஏறிய இளம்பெண் அமுல்யா(19), ‘பாகிஸ்தான் வாழ்க‘ என்று மூன்றுமுறை முழக்கமிட்டாா். இதனால் அதிா்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள், உடனடியாக அமூல்யா மீது பாய்ந்ததோடு, அவா் பேசுவதை தடுத்து, ஒலிவாங்கியையும் பறித்தனா்.
உடனடியாக மேடையில் ஏறிய போலீஸாா் அமுல்யாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, காவல் நிலையத்துக்கு அழைத்துசென்றனா். போலீஸ் விசாரணையில், அமுல்யா, சிக்மகளூரு மாவட்டத்தின் கொப்பா பகுதியை சோ்ந்தவா் என்றும், பெங்களூரில் உள்ள ஆா்.வி.கல்லூரியில் பி.ஏ. பட்டம் படித்துள்ளாா் என்றும் தெரியவந்துள்ளது.
இவா், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மட்டுமல்லாமல், மரங்களை காக்கும் சுற்றுச்சூழல் போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
விசாரணையை தொடர்ந்து அந்த பெண் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 ஏ (தேசத் துரோக வழக்கு) மற்றும் 153 ஏ மற்றும் பி ஆகியவற்றின் கீழ் உப்பார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.